Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அங்கீகாரமாக மகளிருக்கு மாதம் 1 கோடியே 6 இலட்சம் மகளிர் உரிமைத் தொகை: மு.க.ஸ்டாலின்

ஜனவரி 12, 2024 12:48

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், காட்டாம்பூண்டி ஊராட்சியில் மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி, முடிவுற்ற அரசு கட்டிடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்,  நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன், (கலசப்பாக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று வழங்கிய நலத்திட்ட உதவிகள், வருவாய் மற்றும் பேரிடர் துறையின் மூலம் 85 பயனாளிகளுக்கு ரூ.14.17 இலட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் 143 பயனாளிகளுக்கு 9.90 இலட்சம் மதிப்பில், சமூக நலத்துறை மூலம் 1 நபருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் 30 நபர்களுக்கு ரூ.40.52 இலட்சம் மதிப்பில், உழவர் மற்றும் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.22 ஆயிரம் மதிப்பிலும், தோட்டகலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை மூலம் 105 பயனாளி களுக்கு ரூ.2 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் ஆக மொத்தம் 377 பயனாளிகளுக்கு 67.95 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

 ரூ.36.18 இலட்சம் மதிப்பில் திறப்பு விழா செய்யப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் அங்கான்வாடி மையம் கட்டிடங்களையும், புதிதாக அடிக்கல் நாட்டப்பட உள்ள ரூ.10 இலட்சம் மதிப்பில் பல்பொருள் அங்காடி கட்டிடம் மற்றும் ரூ.1 கோடியே 12 இலட்சம் மதிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடத்தினை  பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  அடிக்கல் நாட்டி நலத்திட்டங்களை வழங்கி தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலமாகும். சிறப்பாக மக்கள் திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

திராவிட மாடல் ஆட்சியில் காட்டாம்பூண்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து முடிக்கப்பட்டுருக்கிறது. வடிகால்பணி, புதிய சாலை அமைத்தல், சுகாதார பணிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான உபகரணங்கள் வசதிகள், பள்ளி மாணவர்களுக்கு நாற்காலி மற்றும் மேஜைகள், பேருந்து நிழற்குடை, புதியதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பள்ளி கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, கூடுதலாக பள்ளிவகுப்பறைகள், ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன் வாடி மைய கட்டிடம் ஆகியவற்றிற்கு ரூ. 3 கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் சிறப்பாக நடந்து உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 800க்கு மேலாக உள்ள ஊராட்சிகளுக்கும் சேர்த்து உழைக்கும் நம் முதல்வர் அவர்களால் காட்டாம்பூண்டி ஊராட்சி வளர்ந்து இருக்கிறது. இப்பகுதியில் அரசு அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள் கட்ட உறுதுணையாக இருந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் அவர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை சொல்ல வேண்டும்.

மேலும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி, எடுத்துகாட்டாக காலை சிற்றுண்டி, நமது பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் தான், அவர்கள் காலையில் ஆண், பெண் இருவரும் விவசாயத்திற்கு சென்று விடுகின்றனர்.

அந்த குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் பசியாக இருக்க கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டுவந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் இல்லை, நமது தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் உள்ளது.

கல்லூரி செல்லும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டம் மாத மாதம் ரூ. ஆயிரம் அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இது பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மகளிருக்கு அங்கீகாரமாக 1 கோடியே 6 இலட்சம் பேர்களுக்கு மாதம் மாதம் மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறார் என  பொதுப்பணித்துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்  பார்வதி சீனிவாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றிய குழு தலைவர்கள்  கலைவாணி கலைமணி (திருவண்ணாமலை), பரிமளா கலையரசன் (தண்டாராம்பட்டு),  சுந்தரபாண்டியன் (புதுப்பாளையம்), அய்யாகண்ணு (கீழ்பென்னாத்தூர்), திருவண்ணாமலை ஒன்றிய குழு துணைத்தலைவர் ரமணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் மற்றும்  ஞானசௌந்திரி மாரிமுத்து, காட்டாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்